#17 முதன்மை தேர்வுக்கான பொது பாடங்கள் – இந்திய அரசியலமைப்பு (Indian Polity)
இந்திய அரசியல் சாசனம் (Indian constitution) பகுதி-2
நமது அரசியல் சாசனத்தில் 1 முதல் 4ஆம் ஆர்டிகல் (article ) இந்தியா ( பாரத் என்று சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) மற்றும் அதன் ஆட்சி எல்லைகளையும் மற்றும் பகுதிகளையும் பற்றிக் குறிப்பிடுகிறது. ஆர்டிகல் 2-ன் படி நாடாளுமன்றத்துக்கு புதிய மாநிலங்களை சேர்த்துக்கொள்ளும் அதிகாரம்; ஆர்டிகல் 3இன்படி புதிய மாநிலங்களை மற்ற மாநிலங்களில் இருந்து உருவாக்கும் அதிகாரம், மாநிலங்களின் பரப்பளவைக் கூட்டவும் குறைக்கவும் உள்ள அதிகாரம் போன்றவற்றை தெளிவாக படித்துக் கொள்ளுங்கள். உங்கள் தேர்வு நேரத்தில் இதுபோன்று ஏதாவது தனி மாநிலத்துக்கு போராட்டம் அல்லது புதிய மாநிலம் உருவாகும் நிலை இருந்தால் அவற்றைக் கடந்த பகுதிகளில் கூறியதுபோல் சிறப்புக் குறிப்புகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல், மற்றொரு முக்கியமான விஷயம் – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்துச் சட்டங்களுக்கும் அவை எந்த அவையில் அறிமுகப்படுத்த வேண்டும்; வெற்றிகரமாக நிறைவேற்றப்பட எவ்வளவு மெஜாரிட்டி பெற வேண்டும் என்பனவற்றைப் படிக்கும் இடங்களில் எல்லாம் குறித்து வைத்துக்கொண்டு, ஒரு தனி பட்டியலை தயார் செய்து படித்தால் சுலபமாக பதிலளிக்கலாம்.
உதாரண கேள்வி:
ஆர்டிகல் ( article ) 3ஐ பொருத்தவரை எது சரி
புது மாநிலத்தை உருவாக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மட்டும்தான் முதலில் அறிமுகப்படுத்தவேண்டும்
அவ்வாறு அறிமுகப்படுத்துவதற்கு முன் ஜனாதிபதியின் முன் கூட்டிய ஒப்புதல் தேவை
முன் கூட்டியே ஒப்புதல் அளிக்கும் முன்னர் ஜனாதிபதி அதை புதிய மாநிலம் உருவாக இருக்கும் தாய் மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பார். சட்ட மன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் ஜனாதிபதியால் ஒப்புதல் தர முடியாது
1 only
2 only ( பதில்)
2,3 only
1,3 only
மாநிலங்களை மறுவரையறை செய்ய உருவாக்கிய தர் ( Dhar commission ) கமிஷன், ஜே.வி.பி கமிஷன், ஃபசல் அலி கமிஷன் மற்றும் எந்தெந்த மாநிலம் எப்போது உருவானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக நாம் பார்க்கப்போவது குடியுரிமை ( citizenship). ஆர்டிகல் 5 முதல் 11 வரை இதைச் சார்ந்தவைதான். அது மட்டுமல்லாமல், 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி (Citizenship Act) இந்திய குடியுரிமை வழங்கப்படும் 5 வழிகள் : 1. பிறப்பு 2.வம்சாவளி ( descent ) 3. திருமணப் பதிவு ( Registration) 4. இயல்புரிமை (naturalisation) 5. அந்நிய நாட்டு எல்லைப்பகுதிகள் இந்தியாவோடு சேரும்போது. அதேபோல், இந்திய குடியுரிமையை ஒருவர் இழக்கக்கூடும் 3 சந்தர்ப்பங்கள் 1. துறத்தல் ( Renounciation) 2. துண்டித்தல் ( termination ) 3.பறித்தல் ( Deprivation). ஒவ்வொன்றுக்கும் இருக்கும் நிபந்தனைகள், முக்கிய விதிகள் ஆகியவற்றை பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக, நாம் பார்க்க இருக்கும் தலைப்பு அடிப்படை உரிமைகள் ( Fundamental Rights). இவை பகுதி மூன்று (part III), ஆர்டிகல் 12 முதல் 35 வரை இடம்பெற்றுள்ளன. அமெரிக்க நாட்டின் பில் ஆஃப் ரைட்ஸ் ( Bill of Rights ) மற்றும் பிரெஞ்சு நாட்டின் ரைட் ஆஃப் மேன் ( Right of man ) ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள் நம் அடிப்படை உரிமைகளில் இடம் பெற்றுள்ளன. ஆர்டிகல் 12 முதல் 35 வரை மிக மிக முக்கியம். அதன் அம்சங்களை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். அவைகளின் ஒருவரி அர்த்தங்களை இப்போது பார்க்கலாம் (14 முதல் 24 வரை)
Article ஒரு வரி சிறப்பம்சம்
14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்
15 மதம்,இனம் , சாதி,பால்,பிறப்பிடம் சார்ந்த பாகுபாட்டிற்குத் தடை 15(3), 15(4),15(5) என மூன்று விதிவிலக்குகள் மட்டும் உண்டு
16 வேலைவாய்ப்பு மற்றும் பணி நியமனத்தில் சம உரிமை
17 தீண்டாமை ஒழிப்பு
18 பட்டங்கள் ( Titles) ஒழிப்பு
19 குடிமக்களுக்காக 6 உரிமைகள் ( முதலில் 7 இருந்தன , பின் 44 ஆம் திருத்தத்திற்கு பிறகு சொத்துக்கள் சார்ந்த உரிமை நீக்கப்பட்டது. தற்போது உள்ளவை 1. பேச்சு 2. ஒன்றுகூடுதல் ( assembly )3. சங்கங்கள் அமைக்க 4. நடமாட்டம் ( movement) 5. குடியிருப்பு 6. தொழில். இந்த 6 உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் 19(2) ல் கொடுக்கப்பட்டுள்ளன.
20 சில நேரங்களில் குற்ற செயல்களுக்கான தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு. மூன்று முக்கிய அம்சங்கள் 1. எக்ஸ் போஸ்ட் ஃபேக்டோ லெஜிஸ்லேஷன்( ex post facto legislation)2. டபுள் ஜியோபார்டி ( Double jeopardy) 3. தனக்கெதிராக தானே சாட்சியாக மாறுவதற்கு எதிராக ( prohibition against self incrimination)
21 உயிர் மற்றும் தனி மனித சுதந்திரத்துக்கு பங்கம் வராமல் இருக்க
22 கைதானவர்களுக்கான பாதுகாப்பு
23 கடத்தல் மற்றும் கொத்தடிமைத்தனத்துக்கு எதிரான உரிமை
24 குழந்தைகள் தொழில் புரிவதற்கு எதிரான உரிமை
இந்த அடிப்படை உரிமைகள் (fundamental rights) மிக முக்கியம். அனைத்து ஆர்டிகலிலும் உள்ள முக்கிய அம்சங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த தலைப்பில் (குறிப்பாக ஆர்டிகல் 15, 19, 20 போன்றவை ) இருந்து பலமுறை பல்வேறு தேர்வுகளில் கேள்விகள் வந்துள்ளன. முன்கூட்டியே முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதால், இந்த தலைப்பை உங்களின் மிகப் பெரிய பலமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
— டாக்டர். க.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்
நன்றி விகடன்