`எதிர்மறையான சூழ்நிலையா… அதை நேர்மறையான சூழலுக்குத் திருப்பப் பாருங்கள்!’ – இப்படி ஒருமுறை குறிப்பிட்டார் பல சாதனைகளைப் புரிந்த, பிரபல பேஸ்கெட்பால் விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan). விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இது பொருந்தும். பல நேரங்களில் நம் சோர்வுக்கு, மனக் குழப்பத்துக்கு, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, தோல்விகளுக்குக் காரணமாக இருப்பவை நம் நெகட்டிவ் எண்ணங்களே! பாசிட்டிவ் அணுகுமுறைக்குத்தான் பலம் அதிகம். `நல்லதே நினை, நல்லதே நடக்கும்’ என்பது வெறும் வாக்கியமல்ல. நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய வேதம். நமக்கு நடப்பதெல்லாம் மோசமானதாகவே இருக்கட்டும்… அவற்றையும் பாசிட்டிவான கோணத்தில் பார்த்தால், `எல்லாம் நன்மைக்கே…’ என்று எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும்? அந்த நிறைவை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அதை எடுத்துச் சொல்லும் கதை இது.
அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். அது இரவு நேரம். மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியிருந்தது. கடந்த வருடம் ஏப்ரல் தொடங்கி, மார்ச் மாதம் வரை அவருக்கு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பார்த்தார். நினைக்க நினைக்க சோகம் கவ்விக்கொண்டது. மேசைக்கு முன்பாக அமர்ந்தார். ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டார். அவற்றையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தார்…
– எனக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதில் என் பித்தப்பையை அகற்றிவிட்டார்கள்.
– அறுவைசிகிச்சை காரணமாக நான் பல நாள்களுக்குப் படுக்கையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.
– எனக்கு 60 வயது நிறைவடைந்தது. எனக்குப் பிரியமான வேலை, என் முதுமை காரணமாக என்னைவிட்டுப் போனது.
– சுமார் 30 ஆண்டுகளாக வேலை பார்த்த பப்ளிஷிங் நிறுவனத்திலிருந்து நான் வெளியேறினேன்.
– அதே ஆண்டில், அதே நேரத்தில்தான் பிரியத்துக்குரிய என் தந்தை இறந்து போன துயரமும் நிகழ்ந்தது.
– என் மகனுக்கு ஒரு விபத்து நடந்ததும் கடந்த ஆண்டில்தான். அதனாலேயே அவனுடைய மருத்துவப் படிப்புக்கான தேர்விலும் தோற்றுப் போனான்.
– கால்களில் அடிபட்டதால், என் மகன் கால்களை அசைக்க முடியாமல் பல வாரங்களுக்குப் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.
– விபத்தில் மகனுக்கு அடிபட்டதோடு, என்னுடைய காரும் மிக மோசமாகச் சேதமடைந்திருந்தது.
இதையெல்லாம் எழுதிவிட்டு, கடைசியாக அவர் இப்படி எழுதினார்… `கடவுளே… இது மிக மோசமான வருடம்.’
எழுத்தாளரின் மனைவி, அந்த அறையின் வாசலில் வந்து நின்று எட்டிப் பார்த்தார். கணவர் சோகம் கவிந்த முகத்தோடு ஏதோ யோசனையிலிருப்பதைக் கவனித்தார். அவர் மேசைக்கு முன் அமர்ந்து ஏதோ எழுதுவதும் தெரிந்தது. அவர் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
அன்றைக்கு இரவு கணவர் உறங்கச் சென்ற பிறகு, அந்த அறைக்குள் நுழைந்தார். கணவர் எழுதிய குறிப்பு மேசை மேலேயே இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஒரு கணம் யோசித்தார். இன்னொரு பேப்பரை எடுத்து சில குறிப்புகளை எழுதினார். தன் கணவர் எழுதியிருந்ததை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தான் எழுதிய பேப்பரை வைத்தார். வெளியேறினார்.
அடுத்த நாள் காலை, அந்த எழுத்தாளர் அந்த அறைக்குள் நுழைந்தார். மேசையில் தன் குறிப்புக்குப் பதிலாக வேறொன்று இருப்பதைக் கண்டார். எடுத்துப் படித்தார். அதில் இப்படி எழுதியிருந்தது…
– பல வருடங்களாக எனக்கு பயங்கர வலியைத் தந்துகொண்டிருந்த பித்தப்பையை அகற்றி, அதற்கு விடை கொடுத்தேன்.
– என்னுடைய 60-வது வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் என் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.
– இனி என் நேரத்தை அமைதியான முறையில் கழிப்பேன். இனி, எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் நினைத்ததை எழுத எனக்கு இப்போது அதிக நேரமிருக்கிறது.
– என் தந்தை தன்னுடைய 95-வது வயதில், இறுதிவரை யாரையும் சார்ந்து வாழாத அற்புதமான அந்த மனிதர், எந்தப் பிரச்னையுமில்லாமல் இயற்கை எய்தினார்.
– கடந்த வருடம்தான் கடவுள், என் மகனுக்குப் புதிதாக ஒரு வாழ்க்கையைக் கொடுத்தார்.
– என் கார் சேதமடைந்துபோனது. அது பரவாயில்லை, என் மகனுக்குப் பெரிதாக எதுவும் ஆகாமல், காலில் அடியோடு தப்பித்தானே… அது போதும்.
இந்தக் குறிப்புகளுக்குக் கீழே இப்படி எழுதியிருந்தது. `ஆக, கடவுளின் அளப்பரிய கருணை என் மேல் விழுந்த இந்த வருடம் நல்லவிதமாகக் கடந்துபோனது. நன்றி கடவுளே!’